back to top
HomeTamilவிடுதலைப் பயணம் அதிகாரம் - 8 - திருவிவிலியம்

விடுதலைப் பயணம் அதிகாரம் – 8 – திருவிவிலியம்

விடுதலைப் பயணம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

தவளைகள்

1ஆண்டவர் மோசேயை நோக்கிக் கூறியது: “நீ பார்வோனிடம் போய் அவனிடம், ‘ஆண்டவர் கூறுகிறார்: எனக்கு வழிபாடு செய்வதற்காக என் மக்களைப் போகவிடு‘.

2அவர்களை அனுப்ப நீ மறுத்தால், இதோ நானே உன் நிலப்பகுதியையெல்லாம் தவளைகளால் தாக்கப்போகிறேன்.

3தவளைகள் நைல்நதியை நிரப்பி, பின்னர் உன் வீட்டிற்குள்ளும், உன் படுக்கை அறைக்குள்ளும், உன் படுக்கையிலும், உன் அலுவலர் உன் குடிமக்கள் வீட்டிலும், உன் அடுப்புகளிலும், மாவுபிசையும் தொட்டிகளிலும் ஏறிவந்துவிடும்.

4உன் மேலும், உன் குடிமக்கள் மேலும், உன் அலுவலர் அனைவர் மேலும் தவளைகள் ஏறும்’ என்று சொல்.”

5மேலும், ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீ ஆரோனிடம், ‘கோலைத் தாங்கியபடி உன் கையை நதிகள் மேலும் கால்வாய்களின் மேலும் குளம் குட்டைகள் மேலும் நீட்டி, எகிப்திய நிலத்தின் மேல் தவளைகள் ஏறிவரச் செய்’ என்று சொல்” என்றார்.

6ஆரோன் தம் கையை எகிப்தின் நீர் நிலைகள் மேல் நீட்டவே, தவளைகள் ஏறிவந்து எகிப்து நாட்டை நிரப்பின.

7மந்திரவாதிகளும் தங்கள் வித்தைகளால் இது போலவே செய்து எகிப்திய நிலத்தின்மேல் தவளைகள் ஏறிவரச் செய்தனர்.

8பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து, “என்னிடமிருந்தும், என் குடிமக்களிடமிருந்தும் தவளைகளை அகற்றிவிடுமாறு ஆண்டவரை மன்றாடுங்கள். ஆண்டவருக்குப் பலியிடுமாறு நான் மக்களை அனுப்பிவிடுவேன்” என்று கூறினான்.

9மோசே பார்வோனை நோக்கி, “தவளைகள் உம்மிடமிருந்தும் உம் வீட்டிலிருந்தும் அழிக்கப்பட்டு ஆற்றில் மட்டும் இருக்குமாறு நான் உமக்காகவும் உம் அலுவலர்க்காகவும் உம் குடிமக்களுக்காகவும் எப்போது மன்றாட வேண்டுமென என்னிடம் தெரியப்படுத்தும்” என்று கூறினார்.

10அவன், “நாளைக்கு” என்றான். அதற்கு மோசே, “எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யாரும் இல்லை என நீர் அறிந்து கொள்வதற்காக உம் சொற்படியே ஆகும்;

11உம்மிடமிருந்தும், உம் வீடுகளிலிருந்தும், உம் அலுவலரிடமிருந்தும், உம் குடி மக்களிடமிருந்தும் தவளைகள் ஒழிந்துபோகும்; ஆற்றில் மட்டும் அவைவிட்டு வைக்கப்படும்” என்றார்.

12மோசேயும், ஆரோனும் பார்வோனை விட்டகன்றனர். பின்பு, பார்வோனின் மேல் ஆண்டவர் வரவிட்டிருந்த தவளைகளைக் குறித்து மோசே ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.

13ஆண்டவரும் மோசேயின் மன்றாட்டின்படியே செய்தருளினார். ஆக, வீடுகள், முற்றங்கள், வயல்கள் ஆகியவற்றில் தவளைகள் மடிந்து போயின.

14அவற்றைக் குவியல் குவியலாக திரட்டினர்; எனவே அந்நாடு நாற்றமெடுத்தது.

15தொல்லை ஓய்ந்தது என்று கண்ட பார்வோன் தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். ஆண்டவர் சொன்னபடி அவன் அவர்களுக்குச் செவி சாய்க்கவில்லை.

கொசுக்கள்

16மீண்டும் ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீ ஆரோனிடம், ‘நீ உன்கோலை நீட்டி, நிலத்திலுள்ள புழுதியை அடி! அது எகிப்து நாடெங்கும் கொசுக்களாக மாறும்’ என்று சொல்” என்றார்.

17அவ்வாறே, அவர்களும் செய்தனர். கோல் ஏந்திய தம் கையை நீட்டி ஆரோன் நிலத்தின் புழுதியை அடிக்க, மனிதர் மேலும் விலங்குகள் மேலும் கொசுக்கள் தோன்றின. எகிப்து நாடெங்கும், நிலத்திலுள்ள புழுதியெல்லாம் கொசுக்களாக மாறிற்று.

18கொசுக்கள் தோன்றுவதற்காக மந்திரவாதிகளும் தங்கள் வித்தையால் அது போலவே செய்ய முயன்றனர்; ஆனால், அது அவர்களால் இயலாமற் போயிற்று. கொசுக்கள் மனிதர் மேலும் விலங்குகள் மேலும் தங்கியிருந்தன.

19மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி, “இது கடவுளின் கைவன்மையே” என்றனர். ஆயினும் பார்வோனுடைய மனம் கடினப்பட்டது. ஆண்டவர் அறிவித்தபடியே அவன் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.

ஈக்கள்

20மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, “அதிகாலையில் நீ எழுந்து பார்வோனுக்காகக் காத்து நில். அவன் நீராடத் தண்ணீரை நோக்கி வருவான். அப்போது அவனை நோக்கிச் சொல்; ஆண்டவர் கூறுவது இதுவே: “எனக்கு வழிபாடு செலுத்தும் பொருட்டு என் மக்களைப் போகவிடு;

21என் மக்களை நீ போகவிடவில்லையென்றால், இதோ உன்மேலும், உன் அலுவலர் மேலும், உன் குடிமக்கள் மேலும், உன் வீட்டின் மேலும், ஈக்கள் வரச்செய்வேன். எகிப்தியருடைய வீடுகளும் அவர்கள் இருக்கும் நிலமும் ஈக்களால் நிரம்பும்.

22அந்நாளில், என் மக்கள் தங்கியிருக்கும் கோசேன் நிலப்பகுதியை வேறுபடுத்திக் காட்டுவேன். அங்கு ஈக்கள் எவையுமே இரா. இதனால் இந்நாட்டில் நானே ஆண்டவர் என நீ அறிந்து கொள்வாய்.

23மேலும், என் மக்களுக்கும் உன் மக்களுக்கும் இடையே நான் வேறுபாடு காட்டுவேன். நாளையதினம் இந்த அருஞ்செயல் செய்யப்படும்” என்றார்.

24அவ்வாறே ஆண்டவரும் செய்து முடித்தார். ஈக்கள் பார்வோன் வீட்டிலும், அவனுடைய அலுவலர் வீட்டிலும், எகிப்து நாடெங்கும் திரளாய்ப் பெருகின. ஈக்களால் நாடே பாழாகிவிட்டது.

25பார்வோன் மோசேயையும் ஆரோனையும் வரவழைத்து, “போங்கள், ஆனால் இந்நாட்டிலேயே உங்கள் கடவுளுக்குப் பலியிடுங்கள்” என்றான்.

26அதற்கு மோசே, “அது முறையல்ல; அவ்வாறு செய்தால் எகிப்தியருக்கு அருவருப்பானதை எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் பலியிடுவதாகும். எகிப்தியருக்கு அருவருப்பானதை அவர்கள் கண்முன் நாங்கள் அப்படிப் பலியிட்டால் அவர்கள் எங்களைக் கல்லால் எறியாமல் விடுவார்களா?

27பாலை நிலத்தில் நாங்கள் மூன்று நாள்கள் வழிநடந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு, அவர் எங்களுக்குச் சொல்வதுபோல் பலியிடுவோம்” என்றார்.

28அப்பொழுது பார்வோன், “உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நீங்கள் பாலைநிலத்தில் பலியிட நான் உங்களைப் போகவிடுவேன். ஆனால், வெகுதூரம் சென்று விடாதீர்கள்; மேலும் எனக்காகவும் மன்றாடுங்கள்” என்றுரைத்தான்.

29மோசே மறுமொழியாக, “நான் உம்மிடமிருந்தும் போய், பார்வோனிடமிருந்தும் அவன் அலுவலரிடமிருந்தும் அவன் குடிமக்களிடமிருந்தும் நாளைய தினமே ஈக்கள் அகன்றுவிட வேண்டும் என ஆண்டவரை நோக்கி மன்றாடுவேன். ஆனால், ஆண்டவருக்குப் பலியிடுமாறு மக்களை அனுப்பாமல் பார்வோன் இவ்வாறு தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம்” என்று கூறினார்.

30மோசே பார்வோனை விட்டு அகன்றார்; ஆண்டவரை நோக்கி மன்றாடினார்.

31மோசேயின் மன்றாட்டுக்கிணங்க ஆண்டவரும் செயலாற்றினார். பார்வோனிடமிருந்தும் அவனுடைய அலுவலரிடமிருந்தும் அவனுடைய குடிமக்களிடமிருந்தும் ஈக்கள் அகன்று போயின, ஒன்றுகூட எஞ்சி நிற்கவில்லை.

32இம்முறையும் பார்வோன் தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். மக்களை அவன் போகவிடவில்லை.


8:19 லூக் 11:20.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks