back to top
HomeTamilவிடுதலைப் பயணம் அதிகாரம் - 21 - திருவிவிலியம்

விடுதலைப் பயணம் அதிகாரம் – 21 – திருவிவிலியம்

விடுதலைப் பயணம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

அடிமைகள்
(இச 15:12-18)

1அவர்களுக்கு நீ அளிக்க வேண்டிய நீதிச்சட்டங்கள் பின்வருமாறு;

2நீ ஒரு எபிரேய அடிமையை வாங்கினால், அவன் உனக்கு ஆறு ஆண்டுகள் அடிமை வேலை செய்வான். ஏழாம் ஆண்டு அவன் எதுவும் தராமல் விடுதலை பெற்று வெளியேறுவான்.

3தனித்து வந்திருந்தால் தனித்து வெளியேறுவான்; மனைவியோடு வந்திருந்தால் அவனுடைய மனைவியும் அவனோடு புறப்பட்டுச் செல்வாள்.

4தலைவன் அவனுக்குப் பெண் கொடுத்திருக்க அவள்வழி அவனுக்குப் புதல்வரோ புதல்வியரோ பிறந்திருந்தால், மனைவியும் பிள்ளைகளும் அவளுடைய தலைவனுக்கே சொந்தமானவர். எனவே, அவன் மட்டும் தனித்து வெளியேறுவான்.

5அந்த அடிமை, “நான் என் தலைவனுக்கும் என் மனைவிக்கும் என் பிள்ளைகளுக்கும் அன்பு காட்டுகிறேன்; நான் விடுதலை பெற்றவனாய் வெளியேறிச் செல்ல மாட்டேன்” எனக் கூறுமிடத்து,

6அவனை அவனுடைய தலைவன் கடவுளிடம் கூட்டிக்கொண்டு வருவான். தலைவன் அவனைக் கதவருகில் அல்லது வாயில் நிலைக்கால் மட்டும் கூட்டிவந்து அவனது காதில் தோல் தைக்கும் ஊசியால் துளைபோடுவான். அவன் எக்காலமும் அவனுக்குப் பணிவிடை செய்வான்.

7ஒருவன் தன் மகளை அடிமையாக விற்றிருந்தால், ஆண் அடிமைகள் வெளியேறிச் செல்வதுபோல் அவள் செல்லலாகாது.

8தலைவன் தனக்காக அவளை வைத்திருக்க, அவள் அவனுக்குப் பிடிக்காதவளாய் நடந்து கொண்டால், அவள் மீட்கப்படுவதை அவன் ஏற்றுக்கொள்ளட்டும்; ஆனால், அந்நியருக்கு அவளை விற்றுவிட அவனுக்கு அதிகாரமில்லை; அது அவளுக்குத் துரோகம் இழைப்பதாகும்.

9அவன் தன் மகனுக்காக அவளை நிச்சயித்திருந்தால், ஒரு மகளை நடத்தும் முறைப்படி அவன் அவளுக்குச் செய்யவேண்டும்.

10அவனுடைய மகன் தனக்கென வேறொருத்தியை வைத்துக்கொண்டிருந்தால், உணவு, உடை, மணஉறவின்கடமைகள் இவற்றில் அவளுக்குக் குறை வைக்கலாகாது.

11இம்மூன்றையும் தலைவன் அவளுக்குச் செய்யவில்லையெனில், அவள் பணம் எதுவும் தராமல் புறப்பட்டுப் போய்விடலாம்.

வன்முறைச் செயல்கள்

12மனிதரைச் சாகடிப்பவர் எவரும் கொல்லப்பட வேண்டும்.

13அவர் சாகடிக்கப் பதுங்கி இராதிருந்தும் அவரது கையாலேயே கொல்லப்படக் கடவுள் விட்டிருந்தால், அத்தகையவர் தப்பியோட ஓர் இடத்தை நான் ஏற்பாடு செய்வேன்.

14ஆனால், பிறர்மேல் வெகுண்டெழுந்து, சதித்திட்டத்தால் அவரைச் சாகடிக்கிற எவரும் என் பலிபீடத்தினின்று அப்புறப்படுத்தப்பட்டு கொல்லப்படுவார்.

15தம் தந்தையோ தம் தாயையோ அடிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்.

16ஒருவர் மற்றொருவரைக் கடத்திச் சென்று விற்றுவிட்டாலோ, அவரைத் தம் பிடிக்குள் இன்னும் வைத்திருந்தாலோ, அந்த ஆள் கொல்லப்பட வேண்டும்.

17தம் தந்தையையோ தம் தாயையோ சபிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்.

18இருவர் சண்டையிடுகையில், ஒருவர் மற்றவரைக் கல்லாலோ கை முட்டியாலோ தாக்கியும், தாக்கப்பட்டவர் சாகாமல் படுக்கையில் கிடந்து,

19பின்னர் எழுந்து, கோல் ஊன்றி வெளியே நடக்கத் தொடங்கினால், தாக்கியவர் குற்றப்பழி அற்றவர் ஆவார். ஆயினும், அவரது வேலையிழப்பை முன்னிட்டு அவருக்கு இழப்பீடு கொடுக்கவும் அவரை முழுமையாகக் குணமாக்கவும் வேண்டும்.

20ஒருவர் தம் அடிமையை அல்லது அடிமைப்பெண்ணைக் கோலால் அடிக்க, அவர் அங்கேயை இறந்துவிட்டால், அந்த உரிமையாளர் பழிவாங்கப்படுவார்.

21ஆனால், இரண்டு அல்லது மூன்று நாள்கள் இன்னும் உயிரோடிருந்தால், அவர் பழிவாங்கப்படார். ஏனெனில், அடிமை அவரது சொத்து.

22ஆள்கள் சண்டையிடுகையில், கர்ப்பிணியான பெண்ணுக்கு அடிபட, வேறு யாதொரு கேடும் இன்றிப் பேறுகாலத்துக்குமுன் பிரசவமாகிவிட்டால், அப்பெண்ணின் கணவன் கேட்கிறபடி தண்டம் விதிக்கப்பட்டு, நடுநிலையாளர் வழியாக அது கொடுக்கப்பட வேண்டும்.

23ஆனால், கேடு ஏதேனும் விளைந்தால், உயிருக்கு உயிர்,

24கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்; கைக்குக் கை; காலுக்குக் கால்;

25சூட்டுக்குச் சூடு; காயத்துக்கு காயம்; கீறலுக்குக் கீறல் என நீ ஈடுகொடுப்பாய்.

26ஒருவர் தம் அடிமைகளில் ஆணையோ பெண்ணையோ, அடிக்க, அடிபட்டவர்க்குக் கண்கெட்டுப்போனால் கண்ணுக்கு ஈடாக விடுதலை அளித்து அனுப்பி விடவேண்டும்.

27ஒருவர் தம் அடிமைப் பெண்ணின் பல்லை உடைத்துவிட்டால், பல்லுக்கு ஈடாக விடுதலை அளித்து அனுப்பிவிடவேண்டும்.

உரிமையாளரின் கடமைகள்

28மாடு தன் கொம்பினால் குத்தி, ஒருவனோ ஒருத்தியோ இறந்துவிட்டால், அம்மாடு கொல்லப்பட வேண்டும். அதன் இறைச்சி உண்ணப்படலாகாது. மாட்டின் சொந்தக்காரர் குற்றமற்றவராவார்.

29ஆனால், மாட்டுக்குக் குத்தும் பழக்கம் முன்னரே இருந்திருக்க, அதன் சொந்தக்காரரை எச்சரித்திருந்தும், அவர் ஆவன செய்யாதிருந்த நிலையில், அது ஒருவனை அல்லது ஒருத்தியைக் கொன்று போட்டால், அம்மாடு கல்லால் எறிந்து கொல்லப்படும். அதன் உரிமையாளரும் கொல்லப்படுவார்.

30மாறாக, ஈட்டுத்தொகை அவர்மேல் விதிக்கப்பட்டால், தம் உயிரின் மீட்புக்காக விதிக்கப்பட்ட அனைத்தையும் அவர் கொடுப்பார்.

31மகனாயினும் மகளாயினும் கொம்பினால் குத்திக் கொல்லப்பட்டால், இந்த நீதிச்சட்டத்திற்கேற்ப ஆகட்டும்.

32அடிமையை அல்லது அடிமைப்பெண்ணை மாடொன்று குத்திக்கொன்று போட்டால், அதன் உரிமையாளர் அடிமையின் தலைவருக்கு முப்பது வெள்ளிக்காசு ஈடுகட்டுவார். மாடும் கல்லால் எறிந்து கொல்லப்படும்.

33ஒருவர் குழியொன்றைத் திறந்துவிட்டபின்னரோ அல்லது புதிதாகக் குழியொன்றை வெட்டிய பின்னரோ அதனை மூடி வைக்காதிருக்க, மாடோ கழுதையோ அதில் விழுந்துவிட நேரிட்டால்,

34அதன் உரிமையாளருக்குக் குழியின் சொந்தக்காரர் பணம் ஈடுகட்டி செத்ததை எடுத்துக்கொள்வார்.

35ஒருவரின் மாடு பிறர் மாட்டைக் காயப்படுத்திக் கொன்றுவிட்டால், உயிரோடிருக்கும் மாட்டை விற்றுப் பணத்தை அவர்கள் பங்கிட்டுக் கொள்வார்கள். செத்ததையும் அவர்கள் கூறுபோட்டுக் கொள்வார்கள்.

36ஆனால், மாடு குத்தும் பழக்கமுடையது என முன்னரே தெரிந்திருந்தும், அதன் உரிமையாளர் எதுவும் செய்யாதிருந்தால், அவர் மாட்டுக்கு மாடு என ஈடுகொடுக்கத்தான் வேண்டும். செத்தது அவரைச் சேரும்.


21:2-6 லேவி 25:39-46.
21:12 லேவி 24:17.
21:13 எண் 35:10-34; இச 19:1-13; யோசு 20:1-9.
21:16 இச 24:7.
21:17 லேவி 20:9; மத் 15:4; மாற் 7:18.
21:24 லேவி 24:19-20; இச 19:21; மத் 5:38.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks