back to top
HomeTamilஇணைச் சட்டம் அதிகாரம் - 2 - திருவிவிலியம்

இணைச் சட்டம் அதிகாரம் – 2 – திருவிவிலியம்

இணைச் சட்டம் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

பாலைநிலத்தில் கழிந்த ஆண்டுகள்

1பின்னர், ஆண்டவர் எனக்குச் சொல்லியபடி, நாங்கள் புறப்பட்டுச் செங்கடல் நெடுஞ்சாலை வழியாகப் பாலைநிலத்தில் பயணம் செய்து, பல நாள்கள் சேயிர் மலைநாட்டைச் சுற்றித் திரிந்தோம்.

2அப்பொழுது ஆண்டவர் என்னிடம் உரைத்தது;

3நீங்கள் நெடுங்காலமாக இந்த மலைப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளீர்கள்; இப்போது வடக்கு நோக்கிச் செல்லுங்கள்.

4மேலும், மக்களுக்கு நீ கட்டளையிட வேண்டியது; சேயிர் வாழ் ஏசாவின் புதல்வராகிய உங்கள் சகோதரர்களுடைய எல்லையைக் கடக்கப் போகின்றீர்கள். அவர்கள் உங்களுக்கு அஞ்சுவார்கள். எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.

5அவர்களோடு தகராறு செய்ய வேண்டாம். ஏனெனில், அவர்களுடைய நாட்டில் ஓரடி நிலம்கூட உங்களுக்குக் கொடுக்கமாட்டேன். ஏனெனில், ஏசாவுக்கு சேயிர் மலை நாட்டை உடைமையாகக் கொடுத்துள்ளேன்.

6நீங்கள் அவர்களிடமிருந்து விலைக்கு உணவு வாங்கி உண்பீர்கள். அவ்வாறே, நீங்கள் அவர்களிடமிருந்து விலைக்குத் தண்ணீர் வாங்கிக் குடிப்பீர்கள்.

7ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நீங்கள் செய்த அனைத்திலும் உங்களுக்கு ஆசி வழங்கியுள்ளார். இப் பெரும் பாலைநிலம் வழியாக நீங்கள் நடந்து வந்திருப்பதை அவர் அறிவார். இந்த நாற்பது ஆண்டுகளும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருந்துள்ளார். உங்களுக்கு எதுவுமே குறைவுபடவில்லை.

8அதன்பிறகு, நாம் சேயிர்வாழ் நம் சகோதரராகிய ஏசாவின் மக்களிடமிருந்து புறப்பட்டு, அராபா வழியாய் ஏலாத்துக்கும், எட்சியோன்கெபேருக்கும் சென்றோம். மீண்டும் புறப்பட்டு மோவாபுப் பாலைநிலம் வழியாகச் சென்றோம்.

9அப்பொழுது, ஆண்டவர் என்னிடம், ‘நீ மோவாபைத் துன்புறுத்தாமலும் அவர்களோடு போரிட்டுத் தகராறு செய்யாமலும் இரு. ஏனெனில், அவர்களது நாட்டை உனக்கு உடைமையாகக் கொடுக்க மாட்டேன். மாறாக, ஆர்பகுதிகளை லோத்தின் புதல்வருக்கு உடைமையாகக் கொடுத்துள்ளேன்.

10முற்காலத்தில் ஏமியர் அங்குக் குடியிருந்தனர். அம்மக்கள் ஏனாக்கியர் போன்று வலிமைமிக்கவர்கள், நெடியதாய் வளர்ந்தவர்கள், எண்ணிக்கையில் மிகுதி உடையவர்கள்.

11அவர்கள் ஏனாக்கியர்போல் அரக்கர்கள் எனக் கருதப்பட்டனர். மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று அழைக்கின்றனர்.

12முற்காலத்தில் ஓரியர் சேயிரில் குடியிருந்தனர். ஆண்டவர் தங்களுக்கு உடைமையாகக் கொடுத்த நாட்டில் இஸ்ரயேல் செய்ததுபோல், ஏசாவின் மக்களும் ஓரியரைத் தங்கள் முன்னின்று வெளியேற்றி அழித்து அவர்கள் இடத்தில் குடியேறினர்.-

13இப்பொழுது, எழுந்து, செரேது ஓடையைக் கடந்து செல்லுங்கள்’ என்றார். நாமும் செரேது ஓடையைக் கடந்து சென்றோம்.

14நாம் காதேசு – பர்னேயாவினின்று புறப்பட்டு செரேது ஓடையைக் கடப்பதற்கு ஆன காலம் முப்பத்தெட்டு ஆண்டுகள். அதற்குள் அந்தத் தலைமுறையின் போர்வீரர் அனைவரும், ஆண்டவர் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியபடியே, பாளையத்தினின்று அடியோடு அழிந்தொழிந்தனர்.

15உண்மையாகவே, அவர்கள் அனைவரும் அடியோடு அழிந்தொழியும்வரை ஆண்டவரின் கை அவர்களுக்கு எதிராய் இருந்தது.

16மக்களுள் போர்வீரராய் இருந்த எல்லோரும் முற்றிலும் இறந்தனர்.

17பின்னர், ஆண்டவர் என்னிடம் கூறியது:

18‘இன்று நீ ஆர் நகரைத் தாண்டி மோவாபின் எல்லையைக் கடந்து செல்வாய்.

19அப்பொழுது அம்மோனின் புதல்வரை நெருங்கி வருவாய். நீ அவர்களைத் துன்புறுத்தாமலும், அவர்களோடு போரிட்டுத் தகராறு செய்யாமலும் இரு. ஏனெனில், அம்மோனியரின் நாட்டை உனக்கு உடமையாகக் கொடுக்கமாட்டேன். மாறாக, அதை லோத்தின் புதல்வருக்கு உடைமையாகக் கொடுத்துள்ளேன்’.-

20ஏனெனில், அதுவும் அரக்கர்களின் நிலம் எனக் கருதப்பட்டது. முற்காலத்தில் அங்கு அரக்கர்கள் குடியிருந்தனர். அம்மோனியர் அவர்களை ‘சம்சுமியர்’ என்று அழைக்கின்றனர்.

21அம்மக்கள் ஏனாக்கியர் போன்று வலிமைமிக்கவர்கள், நெடியதாய் வளர்ந்தவர்கள், எண்ணிக்கையில் மிகுந்தவர்கள். ஆனால், ஆண்டவர் அவர்களை அம்மோனியர் முன்னிலையில் அழித்தார். அம்மோனியரும் அவர்களை வெளியேற்றித் தங்கள் முன்னின்று அழித்து அவர்களது இடத்தில் குடியேறினர்.

22இது ஆண்டவர் சேயிர்வாழ் ஏசாவின் மக்களுக்குச் செய்ததற்கு ஒப்பாகும். ஆண்டவர் ஓரியரை அழித்தார். ஏசாவின் மக்கள் ஓரியரை வெளியேற்றிவிட்டு அவர்கள் இடத்தில் இன்றுவரை வாழ்கின்றனர்.

23அதுபோல் கட்சேரிம் தொடங்கி ஆசா வரை வாழ்ந்த அவ்வியரை கப்தோரிலிருந்து வந்த கப்தோரியர் அழித்து, அவர்கள் இடத்தில் குடியேறினர்.-

24‘இப்பொழுது, எழுந்து பயணமாகுங்கள். அர்னோன் ஓடையைக் கடந்து செல்லுங்கள். இதோ, எமோரியனும் எஸ்போனின் அரசனுமாகிய சீகோனையும் அவனது நாட்டையும் உங்களிடம் கையளித்துள்ளேன். அதை உடைமையாக்கிக் கொள்ளுமாறு, அவனோடு போரிடுங்கள்.

25உன்னைப்பற்றிய திகிலும் அச்சமும் வானத்தின் கீழுள்ள எல்லா மக்களினங்கள் மீதும் உண்டாகுமாறு இன்று செய்வேன். அவர்கள் உன்னைப் பற்றிக் கேள்வியுற்று நடுங்கி, உன் பொருட்டுப் பதைபதைப்பர்’.

மன்னன் சீகோனை இஸ்ரயேல் தோற்கடித்தல்
(எண் 21:21-30)

26அப்பொழுது நான் கெதமோத்துப் பாலைநிலத்திலிருந்து எஸ்போனின் மன்னனாகிய சீகோனிடம் தூதரை அனுப்பி நல்லுறவுச் செய்தியுடன் சொன்னது:

27‘நாங்கள் உமது நாட்டின் நெடுஞ்சாலை வழியே கடந்து செல்ல அனுமதி கொடும். வலமோ இடமோ திரும்பாமல், நெடுஞ்சாலையில் மட்டும் நாங்கள் செல்வோம்.

28நீர் எமக்கு உணவை விலைக்குத் தாரும். நாங்கள் உண்போம். எமக்கு நீரை விலைக்குத் தாரும், நாங்கள் பருகுவோம். நாங்கள் கால்நடையாய்க் கடந்து போக மட்டும் அனுமதி கொடும்.

29சேயிர் வாழ் ஏசாவின் மக்களும், ஆர் நகர் வாழ் மோவாபியரும் எமக்கு அனுமதி கொடுத்தது போல், யோர்தானைக் கடந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்குக் கொடுக்க இருக்கிற நாட்டில் சேர்வதற்கு அனுமதி கொடும்.’

30ஆனால், எஸ்போனின் மன்னன் சீகோன் தன் நாட்டின் வழியே கடந்து செல்ல நமக்கு அனுமதியளிக்கவில்லை. இன்றும் இருப்பதுபோல் அவனை உங்கள் கையில் ஒப்படைக்கும் பொருட்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவன் மனத்தைக் கடினப்படுத்தியிருந்தார்; அவன் இதயத்தையும் கல்லாக்கியிருந்தார்.

31அப்பொழுது ஆண்டவர் என்னிடம், ‘இதோ, சீகோனையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்படைக்கிறேன். அவனது நாட்டை உடைமையாக்கிக் கொள்ளுமாறு அதைக் கைப்பற்றத் தொடங்கு’ என்றார்.

32சீகான் தம் மக்கள் அனைவரோடும் நம்மை எதிர்கொண்டு யாகசுவில் போரிடப் புறப்பட்டு வந்தான்.

33நம் கடவுளாகிய ஆண்டவர் அவனை நம் கையில் ஒப்படைத்தார். நாம் அவனையும் அவன் புதல்வரையும் அவன் குடிமக்கள் அனைவரையும் முறியடித்தோம்.

34அச்சமயம் அவன் நகர்கள் அனைத்தையும் கைப்பற்றி அங்கிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், எவரையுமே தப்பவிடாமல் அழித்தொழித்தோம்.

35கால்நடைகளையும், நாம் பிடித்த நகர்களின் கொள்ளைப் பொருள்களையும் நமக்கெனச் சூறையாடினோம்.

36அர்னோன் ஓடையின் ஓரத்தில் உள்ள அரோயேரும், ஓடையை ஒட்டியுள்ள நகர் தொடங்கி, கிலயாது வரைக்கும் நம்மை எதிர்க்கக் கூடிய அரண்சூழ் நகர் எதுவுமே இருந்ததில்லை. நம் கடவுளாகிய ஆண்டவர் எல்லாவற்றையும் நம் கையில் ஒப்படைத்தார்.

37ஆனால், நம் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்ட இடங்கள் அனைத்தையும், அம்மோனியரின் நாட்டையும், யாபோக்கு ஓடைக் கரையிலுள்ள ஊர்களையும் மலை நாட்டு நகர்களையும் நீங்கள் அணுகவில்லை.


2:1 எண் 21:4.
2:4 தொநூ 36:8.
2:9 தொநூ 19:37.
2:14 எண் 14:28-35.
2:19 தொநூ 19:38.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks