back to top
HomeTamilஆமோஸ் அதிகாரம் - 5 - திருவிவிலியம்

ஆமோஸ் அதிகாரம் – 5 – திருவிவிலியம்

ஆமோஸ் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

மனம் மாறிட அழைப்பு

1இஸ்ரயேல் வீட்டாரே, உங்களைப் பற்றி நான் புலம்பிக் கூறும் இந்த வாக்கைக் கேளுங்கள்;

2“இஸ்ரயேல் என்னும் கன்னிப் பெண்

விழுந்துகிடக்கிறாள்,

இனி எழவேமாட்டாள்;

தரையில் தன்னந்தனியளாய்க்

கிடக்கின்றாள்;

அவளைத் தூக்கிவிடுவார் யாருமில்லை.”

3ஏனெனில், தலைவராகிய ஆண்டவர்

கூறுவது இதுவே:

“ஆயிரம் பேரை அனுப்பிய நகரில்

நூறு பேரே எஞ்சியிருப்பர்;

நூறு பேரை அனுப்பிய நகரில்

பத்துப் பேரே எஞ்சியிருப்பர்;

இஸ்ரயேல் வீட்டாரின் கதி இதுவே.”

4இஸ்ரயேல் வீட்டாருக்கு

ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:

என்னைத் தேடுங்கள்,

நீங்கள் வாழ்வீர்கள்;

5ஆனால் பெத்தேலைத் தேடாதீர்கள்,

கில்காலில்

காலெடுத்து வைக்காதீர்கள்;

பெயேர்செபாவுக்குக்

கடந்து போகவேண்டாம்;

ஏனெனில் கில்கால்

உண்மையாகவே நாடுகடத்தப்படும்;

பெத்தேல் பாழாக்கப்படும்.

6ஆண்டவரைத் தேடுங்கள்;

நீங்கள் வாழ்வீர்கள்;

இல்லையேல்

அவர் யோசேப்பின் வீட்டின்மேல்

தீ மூளச் செய்வார்.

அந்நெருப்பு அதை விழுங்கிவிடும்,

பெத்தேலில் அந்நெருப்பை

அணைக்கக்கூடியவர் எவருமிரார்.

7அவர்கள் நீதியை

எட்டிக்காயாய் மாற்றுகின்றார்கள்;

நேர்மையை மண்ணில் எறிகின்றார்கள்.

8ஆனால், அவரே

கார்த்திகை, மிருகசீரிடம்

ஆகிய விண்மீன்களை உண்டாக்கியவர்;

காரிருளைக் காலைப்பொழுது

ஆகச் செய்பவர்;

பகற்பொழுதை

இரவு வேளையாய் மாற்றுபவர்;

கடல் நீரை அழைத்து

நிலத்தின்மேல் பொழியச் செய்பவர்;

அவரது பெயர் “ஆண்டவர்”.

9வலிமை மிக்க தளங்கள்மேல்

அவர் அழிவை அனுப்புவதால்

அவை அழிவைக் காண்கின்றன.

10அவர்கள் நகர் வாயிலில் நின்றுகொண்டு

தங்களைக் கண்டிப்பவனைப்

பகைக்கிறார்கள்;

உண்மை பேசுபவனை

வெறுத்து ஒதுக்குகின்றார்கள்.

11நீங்கள் ஏழைகளை நசுக்கி,

அவர்களிடம் தானிய வரியாக

வாங்கியதைக் கொண்டு

நன்கு செதுக்கிய கற்களால்

வீடு கட்டினீர்கள்;

அந்த வீடுகளில் நீங்கள்

வாழப் போவதில்லை;

அருமையான திராட்சைத் தோட்டங்களை

அமைத்தீர்கள்;

அவை தரும் திராட்சை இரசத்தை

நீங்கள் குடிக்கப் போவதில்லை.

12உங்கள் குற்றங்கள்

எவ்வளவு மிகுதியானவை என்றும்

உங்கள் பாவங்கள்

எத்துணைக் கொடியவை என்றும்

நான் அறிவேன்;

நல்லாரைத் துன்புறுத்துகிறீர்கள்,

கையூட்டு வாங்குகிறீர்கள்,

நகர் வாயிலில் வறியோருக்கு

நீதி வழங்க மறுக்கிறீர்கள்.

13அது கெட்ட காலம் என்பதால்,

அப்போது விவேகமுள்ளவன் வாய் திறக்கமாட்டான்.

14நன்மையை நாடுங்கள்,

தீமையைத் தேடாதீர்கள்;

அப்பொழுது நீங்கள் சொல்வதுபோல

படைகளின் கடவுளாகிய ஆண்டவர்

உங்களோடு இருப்பார்.

15தீமையை வெறுத்து

நன்மையை நாடுங்கள்;

நகர் வாயிலில்

நீதியை நிலைநாட்டுங்கள்;

அப்பொழுது ஒருவேளை

படைகளின் கடவுளாகிய ஆண்டவர்

யோசேப்பின் வீட்டாரில்

எஞ்சியிருப்போர்க்கு

இரக்கம் காட்டுவார்.

16ஆகையால், படைகளின் கடவுளும்

தலைவருமாகிய ஆண்டவர்

இவ்வாறு கூறுகிறார்;

“பொதுவிடங்கள் எங்கும்

அழுகுரல் கேட்கும்,

எல்லா வீதிகளிலும்,

“ஐயோ! ஐயோ!” என்ற

புலம்பல் எழும்பும்;

வயலில் வேலை செய்வாரை

அழுவதற்குக் கூப்பிடுவர்;

ஒப்பாரி பாடத் தெரிந்தவர்களை

ஓலமிட்டுப் புலம்ப அழைப்பர்.

17திராட்சைத் தோட்டம் எங்கணும்

ஒரே அழுகையாய் இருக்கும்;

ஏனெனில், உங்கள் நடுவே

நான் கடந்து செல்வென்”,

என்கிறார் ஆண்டவர்.

18ஆண்டவரின் நாளைப்

பார்க்க விரும்புவோரே,

உங்களுக்கு ஐயோ கேடு!

ஆண்டவரின் நாளுக்காக

நீங்கள் ஏங்குவது ஏன்?

அது ஒளிமிக்க நாளன்று;

இருள் சூழ்ந்த

நாளாகத் தான் இருக்கும்.

19அந்த நாள், சிங்கத்திடமிருந்து

தப்பி ஓடிய ஒருவனைக்

கரடி ஒன்று எதிர்கொண்டாற்போலும்,

அவன் தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து,

சுவரில் கைவைத்துச் சாய்ந்த போது,

பாம்பு ஒன்று கடித்தாற்போலும்

இருக்கும்!

20ஆண்டவரின் நாள்

ஒளியின் நாள் அன்று;

அது இருள் கவிந்தது அல்லவா?

வெளிச்சமில்லாத காரிருள் அல்லவா?

21“உங்கள் திருவிழாக்களை

நான் வெறுத்து அருவருக்கின்றேன்;

உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில்

எனக்கு விருப்பமே இல்லை.

22எரிபலிகளையும்

தானியப் படையல்களையும்

எனக்கு நீங்கள் செலுத்தினாலும்

நான் ஏற்க மாட்டேன்;

கொழுத்த விலங்குகளை

நல்லுறவுப் பலிகளாகச்

செலுத்தும்போது

நான் ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன்.

23என் முன்னிலையில்

நீங்கள் இரைச்சலிட்டுப் பாடும்

பாடல்களை நிறுத்துங்கள்,

உங்கள் வீணைகளின் ஓசையை

நான் கேட்க மாட்டேன்.

24மாறாக, நீதி

வெள்ளமெனப் பொங்கி வருக!

நேர்மை

வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!

25“இஸ்ரயேல் வீட்டாரே, பாலை நிலத்தில் இருந்த அந்த நாற்பது ஆண்டுகளில் பலிகளும் காணிக்கைகளும் எனக்குக் கொடுத்தீர்களோ?

26நீங்கள் சிக்கூத்தை மன்னனாகவும் கிய்யோனை விண்மீன் தெய்வமாகவும் ஏற்றுக் கொண்டீர்கள்; அவற்றின் வடிவில் உங்களுக்கெனச் சிலைகளும் செய்து கொண்டீர்கள்; அந்தச் சிலைகளை நீங்கள் தூக்கிக்கொண்டு போகும் நாள் வரும்.

27உங்களை நாள் தமஸ்குவுக்கும் அப்பால் நாடுகடத்தப்போகிறேன்”, என்கிறார் ஆண்டவர்; அவரது பெயர் “படைகளின் கடவுள்.”


5:8 யோபு 9:1; 38:31.
5:21-22 எசா 1:11-14.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks