back to top
HomeTamilதிருத்தூதர் பணிகள் அதிகாரம் - 24 - திருவிவிலியம்

திருத்தூதர் பணிகள் அதிகாரம் – 24 – திருவிவிலியம்

திருத்தூதர் பணிகள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

பவுலுக்கு எதிரான வழக்கு

1ஐந்து நாட்களுக்குப்பின் தலைமைக்குருவான அனனியாவும் சில மூப்பர்களும் வழக்குரைஞரான தெர்த்துல் என்பவரும் வந்து பவுலுக்கெதிராக ஆளுநரிடம் முறையிட்டார்கள்.

2-3தெர்த்துல் அழைக்கப்பட்டபோது, அவர் குற்றம் சாட்டத் தொடங்கிக் கூறியது: “மாண்புமிகு பெலிக்சு அவர்களே! உம்மால் தான் நாட்டில் பேரமைதி நிலவுகிறது. உம் தொலை நோக்கால்தான் இந்நாடு எல்லா இடங்களிலும் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. இதனை நாங்கள் மிக்க நன்றியுணர்வோடு ஏற்றுக் கொள்கிறோம்.

4இனியும் உம்முடைய நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. நான் கூற விரும்புவதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்; நீர் பொறுமையுடன் கேட்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

5தொல்லை கொடுக்கும் இந்த மனிதனை நாங்கள் கண்டுபிடித்தோம். இவன் உலகம் முழுவதிலுமுள்ள யூதர் அனைவரிடையேயும் கலகமூட்டி வருகிறான்; நசரேயக் கட்சியினரின் தலைவனாகவும் செயல்படுகிறான்.

6aதிருக்கோவிலை இவன் தீட்டுப்படுத்த முயன்றபோது இவனை நாங்கள் பிடித்துக் கொண்டோம். [*]

7[*]

[*] 8bநீர் விசாரணை செய்தால் நாங்கள் இவன் மேல் சுமத்தும் குற்றம் அனைத்தும் உண்மை என அறிய முடியும்.”

9யூதர்களும் அவரோடு சேர்ந்து இக்குற்றச்சாட்டுகள் யாவும் உண்மையே எனக் கூறினார்கள்.

பெலிக்சின் முன்னிலையில் பவுல் தம் நிலையை விளக்குதல்

10பவுல் பேசுமாறு ஆளுநர் சைகை காட்ட, அவர் கூறியது: “பல ஆண்டுகளாக நீர் இந்த நாட்டின் நடுவராக இருந்து வருகிறீர் என்பதை நான் அறிந்து நம்பிக்கையோடு என் நிலையை விளக்குகிறேன்.

11நான் கடவுளை வணங்குவதற்காக எருசலேமுக்குச் சென்று பன்னிரண்டு நாள் கூட ஆகவில்லை என்பதை நீரே விசாரித்து அறிந்து கொள்ளலாம்.

12நான் கோவிலில் எவரோடாவது விவாதித்ததையோ, நகரிலோ தொழுகைக்கூடத்திலோ மக்களிடையே கலக மூட்டியதையோ, இவர்கள் யாருமே கண்டதில்லை.

13இப்போது இவர்கள் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளையும் உம்முன் இவர்களால் மெய்ப்பிக்க முடியாது.

14ஆனால், இந்த ஒன்று மட்டும் உம்மிடம் நான் ஒப்புக்கொள்கிறேன். இவர்கள் ஒரு கட்சி எனக் கூறிவரும் கிறிஸ்தவ நெறியின்படியே, நான் என் மூதாதையரின் கடவுளை வழிபட்டு வருகிறேன்; திருச்சட்டத்திலும், இறைவாக்கினர் நூல்களிலும் உள்ள அனைத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

15நேர்மையாளரும் நேர்மையற்றோரும் உயிர்த்தெழுவர் என்று அவர்கள் எதிர்நோக்குகின்றார்கள். அதே எதிர்நோக்கைக் கடவுள் எனக்கும் கொடுத்துள்ளார்.

16அவர்களைப் போல நானும் கடவுள் முன்னிலையிலும் மக்கள் முன்னிலையிலும் எப்போதும் குற்றமற்ற மனச்சான்றோடு வாழ முயலுகிறேன்.

17பல ஆண்டுகளுக்குப் பின் என் இனத்தார்க்குப் பண உதவி செய்யவும் பலி செலுத்தவும் நான் இங்கு வந்தேன்.

18நான் கோவிலில் தூய்மைச் சடங்கு செய்துகொண்டிருந்தபோது இவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது அங்கு மக்கள் கூட்டமோ அமளியோ இல்லை.

19ஆனால், ஆசியாவிலிருந்து வந்த யூதருள் சிலர் அங்கிருந்தனர். எனக்கு எதிராக ஏதாவது இருந்திருந்தால் அவர்கள் உமக்குமுன் வந்து குற்றம் சாட்டியிருக்க வேண்டும்.

20அல்லது நான் தலைமைச் சங்கத்தரால் விசாரிக்கப்பட்டபோது என்னிடம் என்ன குற்றம் கண்டார்களென இங்கிருப்பவர்களாவது எடுத்துச் சொல்லட்டும்.

21சங்கத்தார் நடுவில் நின்று, ‘இறந்தோர் உயிர்த்தெழுவர் என்று சொன்னதால் இன்று நான் உங்கள் முன்பு விசாரிக்கப்படுகிறேன்’ என்று உரத்த குரலில் கூறினேன். இது ஒன்றைத் தவிர வேறு என்ன குற்றம் கண்டார்கள்; சொல்லட்டும்.”

22கிறிஸ்தவ நெறியைப் பற்றி மிகத் திட்டவட்டமாக அறிந்திருந்த பெலிக்சு, “ஆயிரத்தவர் தலைவரான லீசியா வரும்போது உங்களை விசாரிப்பேன்” என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

23அதோடு அவர், “பவுலைக் காவலில் வையுங்கள் ஆனால், கடுங்காவல் வேண்டாம்; பணிவிடை செய்ய அவரது உறவினரைத் தடுக்கவும் வேண்டாம்” என நூற்றுவர் தலைவரிடம் பணித்தார்.

பவுல் காவலில் வைக்கப்படுதல்

24சில நாள்களுக்குப் பின்பு பெலிக்சு தம் யூத மனைவியாகிய துருசில்லாவுடன் வந்தார். அவர் பவுலை வரவழைத்து, கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கை கொள்வது பற்றி அவர் கூறியவற்றைக் கேட்டார்.

25நேர்மை, தன்னடக்கம், வரப்போகும் தீர்ப்பு ஆகியனபற்றிப் பவுல் பேசியபொது பெலிக்சு அச்சமுற்று அவரைப் பார்த்து, “இப்போது நீர் போகலாம், நேரம் வாய்க்கும்போது உம்மை வரவழைப்பேன்” என்று கூறினார்.

26அதே வேளையில் பவுல் தமக்குப் பணம் கொடுப்பாரென அவர் எதிர்பார்த்தார்; ஆகையால், அடிக்கடி பவுலை வரவழைத்து அவரோடு உரையாடி வந்தார்.

27இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் பெலிக்சுக்குப் பின் பொர்க்கியு பெஸ்து ஆளுநர் பதவியேற்றார். பெலிக்சு யூதரது நல்லெண்ணத்தைப் பெற பவுலைக் கைதியாக விட்டுச் சென்றார்.


24:17-18 திப 21:17-28.
24:21 திப 23:6.


24:6-8 6ஆ ‘நாங்கள் எங்கள் திருச் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்க விரும்பினோம். 7 ஆனால் ஆயிரத்தவர் தலைவரான லீசியா வந்து வலுக் கட்டாயமாக இவனை எங்களிடமிருந்து கூட்டிக் கொண்டு போய் விட்டார். 8அ இவனுக்கு எதிராகக் குற்றம் சாட்டுவோர் உம்மிடம் வர ஆணை பிறப்பித்தார்’ என சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது.
24:8 [நாங்கள்… பிறப்பித்தார்] அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்றொடர்கள் சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks