back to top
HomeTamil2 மக்கபேயர் அதிகாரம் - 1 - திருவிவிலியம்

2 மக்கபேயர் அதிகாரம் – 1 – திருவிவிலியம்

2 மக்கபேயர் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1. எகிப்திய யூதர்களுக்கு விடுத்த மடல்கள்

முதல் மடல்

1“எகிப்து நாட்டில் உள்ள தங்கள் யூத உறவின் முறையினருக்கு எருசலேமிலும் யூதேயா நாட்டிலும் உள்ள யூத உறவின்முறையினர் நலனும் அமைதியும் பெருக வாழ்த்தி எழுதுவது:

2கடவுள் உங்களுக்கு நன்மை செய்து, நம்பிக்கைக்குரிய தம் அடியார்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவு கூர்வாராக!

3தம்மை வழிபடவும் தமது திருவுளத்தைப் பரந்த உள்ளத்தோடும் தாராள மனத்தோடும் நிறைவேற்றவும் வேண்டிய இதயத்தை உங்கள் அனைவருக்கும் அளிப்பாராக!

4தம்முடைய திருச்சட்டம், கட்டளைகளைப் பொறுத்தவரை உங்களுக்குத் திறந்த உள்ளத்தையும் அமைதியையும் அருள்வாராக!

5உங்கள் மன்றாட்டுக்குச் செவிசாய்ப்பாராக; உங்களோடு ஒப்புரவுசெய்து, இடுக்கண் வேளையில் உங்களைக் கைவிடாதிருப்பாராக!

6இப்போது நாங்கள் இங்கு உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டு வருகிறோம்.”

7-8“தெமேத்திரி மன்னரது ஆட்சியில், நூற்று அறுபத்தொன்பதாம் ஆண்டில்* யாசோனும் அவனுடைய தோழர்களும் தூய நாட்டுக்கும் அதன் ஆட்சிக்கும் எதிராகத் துரோகம் செய்து, கோவில் வாயிலைத் தீக்கிரையாக்கி மாசற்ற குருதியைச் சிந்திய காலத்துக்குப்பின் எங்களுக்கு ஏற்பட்ட இன்னல் இடையூறுகளின்போது நாங்கள் உங்களுக்கு எழுதினோம்; ஆண்டவரிடம் மன்றாடினோம். எங்கள் மன்றாட்டு கேட்கப்பட்டது. நாங்கள் பலியும் உணவுப் படையலும் ஒப்புக்கொடுத்தோம்; விளக்கேற்றினோம்; அப்பம் படைத்தோம்.

9எனவே நீங்கள் கிஸ்லேவ் மாதம் கூடாரத் திருவிழாவைக் கொண்டாடக் கருத்தாயிருங்கள். நூற்று எண்பத்தெட்டாம் ஆண்டு* இது எழுதப்பெற்றது.”

இரண்டாம் மடல்

10“தாலமி மன்னரின் ஆசிரியரும் திருப்பொழிவு பெற்ற குருக்கள் வழிமரபில் தோன்றியவருமான அரிஸ்தோபுலுக்கும் எகிப்தில் உள்ள யூதர்களுக்கும் எருசலேம் மக்களும் யூதேயாவின் குடிகளும் ஆட்சிக் குழுவினரும் யூதாவும் நலம்பெற வாழ்த்தி எழுதுவது;

11மன்னருக்கு எதிராக எம் பக்கம் நின்று, பேரிடர்களிலிருந்து எங்களைக் காப்பாற்றிய கடவுளுக்குப் பெரிதும் நன்றி நவில்கிறோம்;

12ஏனெனில் அவர் திருநகருக்கு எதிராகப் போரிட்டவர்களை விரட்டியடித்தார்.

13வெல்லற்கரியதாய்த் தோன்றிய தம் படையோடு அந்தியோக்கு பாரசீகத்தில் நுழைந்தபோது, நானயா என்னும் தேவதையின் அர்ச்சகர்கள் சூழ்ச்சிசெய்து கோவிலிலேயே அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.

14அந்தியோக்கு அத்தேவதையை மணமுடிக்கும் பாவனையில் கோவிலின் திரளான செல்வத்தைச் சீர்வரிசையாகப் பெறுவதற்காகத் தம் நண்பர்களோடு அங்குச் சென்றார்.

15நானயாவின் அர்ச்சர்கள் செல்வத்தை வெளியே எடுத்துவைத்தபொழுது, அந்தியோக்கு தம் நண்பர்கள் சிலரோடு கோவில் முற்றத்தினுள் நுழைந்தார். அவர் நுழைந்ததும் அர்ச்சகர்கள் கோவிலை அடைத்தார்கள்.

16மேல்தட்டில் மறைவாக இருந்த கதவைத் திறந்து கற்களை எறிந்து மன்னரைத் தாக்கினார்கள்; அவரையும் அவருடைய ஆள்களையும் துண்டு துண்டாக்கித் தலைகளையும் வெட்டி வெளியே நின்றுகொண்டிருந்தவர்கள்முன் வீசியெறிந்தார்கள்.

17இறைப்பற்றில்லாதவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கிய நம் கடவுள் எல்லாவற்றிலும் போற்றப்படுவாராக.”

18“கிஸ்லேவ் மாதம் இருபத்தைந்தாம் நாள் கோவிலின் தூய்மைப் பாட்டு விழாவை நாங்கள் கொண்டாடவிருக்கிறோம்; நெகேமியா கோவிலையும் பலிபீடத்தையும் மீண்டும் கட்டி எழுப்பிப் பலிசெலுத்திய வேளையில் தோன்றிய நெருப்பை நினைவுகூரும் கூடாரத் திருவிழாவை நீங்களும் கொண்டாடுமாறு உங்களுக்கு இதை அறிவிப்பது முறை என்று எண்ணினோம்.

19ஏனெனில் நம் மூதாதையர் பாரசீகத்திற்கு நாடு கடத்தப்பட்டபொழுது இறைப்பற்று உடையவர்களாய் அன்று விளங்கிய குருக்கள் பலிபீடத்தினின்று யாரும் அறியாதவாறு நெருப்பை எடுத்து, ஒரு பாழ்கிணற்றில் இருந்த பொந்து ஒன்றில் மறைத்துவைத்தார்கள்; அந்த இடம் எவருக்கும் தெரியாதவாறு பார்த்துக் கொண்டார்கள்.

20பல ஆண்டுகள் கடந்தபின் கடவுள் விரும்பியபொழுது, பாரசீக மன்னரின் ஆணையோடு நெகேமியா, நெருப்பை ஒளித்துவைத்திருந்த குருக்களின் வழிமரபினரை அதைக் கொணரும்படி அனுப்பினார். அவர்கள் நெருப்புக்குப் பதிலாக ஒரு கெட்டியான நீர்மத்தையே கண்டதாக எங்களுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அதை எடுத்துவருமாறு அவர் கட்டளையிட்டார்.

21விறகின் மேல் பலிப்பொருள்கள் வைக்கப்படவே, அவற்றின்மீது அந்நீர்மத்தைத் தெளிக்கும்படி நெகேமியா குருக்களுக்குக் கட்டளையிட்டார்.

22அவ்வாறே செய்யப்பட்டது. முன்னர் முகில்களால் மூடப்பட்டிருந்த கதிரவன் சிறிது நேரத்திற்குப்பின் ஒளிரத் தொடங்கினான். உடனே பெரும் நெருப்பு பற்றியெரிந்தது. அதனால் அனைவரும் வியப்படைந்தனர்!

23பலிப்பொருள்கள் எரிந்து கொண்டிருந்த வேளையில் குருக்களும் மற்ற அனைவரும் வேண்டுதல் செய்தார்கள்; யோனத்தான் வழிநடத்த, நெகேமியாவைப்போல மற்றவர்களும் அதற்குப் பதிலுரைத்தார்கள்.”

24“அவ்வேண்டல் பின்வருமாறு: ‘ஆண்டவரே, கடவுளாகிய ஆண்டவரே, அனைத்தையும் படைத்தவரே, நீர் அச்சத்துக்குரியவர், வல்லவர், நீதியுள்ளவர், இரக்கமுடையவர்; நீர் ஒருவரே அரசர், அருள்கூர்பவர்.

25நீர் ஒருவரே வாரி வழங்குபவர், நீதியுள்ளவர், எல்லாம் வல்லவர், என்றும் உள்ளவர். நீரே இஸ்ரயேலை எல்லாத் தீமைகளினின்றும் விடுவிப்பவர். எங்கள் மூதாதையரைத் தெரிந்தெடுத்து உமக்கென்று உரித்தாக்கிக் கொண்டவரும் நீரே.

26உம் மக்களான இஸ்ரயேலர் அனைவரின் பெயராலும் இப்பலியை ஏற்றுக்கொள்ளும்; உமது பங்கைப் பாதுகாத்து உமக்கென்று உரித்தாக்கிக் கொள்ளும்.

27சிதறிக்கிடக்கும் எங்கள் மக்களை ஒன்றுசேரும்; பிற இனத்தார் நடுவே அடிமைகளாய் இருப்பவர்களுக்கு விடுதலை வழங்கும்; புறக்கணிக்கப்பட்டவர்களையும் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களையும் கனிவுடன் கண்ணோக்கும். நீரே எங்கள் கடவுள் எனப் பிற இனத்தார் அறிந்து கொள்ளட்டும்.

28எங்களை ஒடுக்கிறவர்களையும் இறுமாப்புக் கொண்டு கொடுமைப்படுத்துகிறவர்களையும் தண்டியும்.

29மோசே வாக்களித்ததுபோல் உமது தூய இடத்தில் உம் மக்களை உறுதிப்படுத்தும்.”

30“பின்பு குருக்கள் புகழ்ப்பா இசைத்தார்கள்.

31பலிப் பொருள்கள் முற்றிலும் எரிந்தபின் எஞ்சியிருந்த நீர்மத்தைப் பெரிய கற்களின்மேல் ஊற்றும்படி நெகேமியா பணித்தார்.

32அவ்வாறு செய்தபோது தீப்பிழம்பு கொழுந்துவிட்டெரிந்தது; ஆனால் பலி பீடத்திலிருந்து எழுந்து வந்த பேரொளியின்முன் அது மங்கிவிட்டது.”

33“இதுபற்றிய செய்தி எங்கும் பரவியது. நாடு கடத்தப்பட்ட குருக்கள் தீயை மறைத்துவைத்த இடத்தில் நீர்மம் காணப்பட்டதும், அதைக் கொண்டு நெகேமியாவும் அவரோடு இருந்தவர்களும் பலிப்பொருள்களை எரித்துத் தூய்மைப்படுத்தியதும் பாரசீக மன்னருக்கு அறிவிக்கப்பட்டது.

34மன்னர் இதுபற்றிக் கேட்டறிந்தார்; அந்த இடத்தைச் சுற்றி அடைத்து அதைத் தூய இடமாக அமைத்தார்.

35அங்கிருந்து கிடைத்த திரளான வருவாயிலிருந்து மன்னர் தாம் விரும்பியவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்குவார்.

36நெகேமியாவும் அவரோடு இருந்தவர்களும் அந்த நீர்மத்தை ‘நெப்தார்’ என்று அழைத்தார்கள். அதற்குத் ‘தூய்மைப்பாடு’ என்பது பொருள். ஆனால் ‘நெப்தாய்’ என்றே பலரும் அதை அழைக்கின்றனர்.”


1:7 2 மக் 4:7-22.
1:13-16 2 மக் 9:1-29; 1 மக் 6:1-16.
1:29 இச 30:3-8.


1:7 கி.மு. 143.
1:9 கி.மு. 124.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks