back to top
HomeTamil2 அரசர்கள் அதிகாரம் - 18 - திருவிவிலியம்

2 அரசர்கள் அதிகாரம் – 18 – திருவிவிலியம்

2 அரசர்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

யூதா அரசர் எசேக்கியா
(2 குறி 29:1-2; 31:1)

1இஸ்ரயேல் அரசன் ஏலாவின் மகன் ஓசேயா ஆட்சியேற்ற மூன்றாம் ஆண்டில், ஆகாசின் மகன் எசேக்கியா யூதாவின் அரசனானார்.

2அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து. அவர் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். செக்கரியாவின் மகளாகிய அபி என்பவரே அவருடைய தாய்.

3அவர் தம் தந்தை தாவீதைப் போலவே அனைத்திலும் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தார்.

4அவர் தொழுகை மேடுகளை அழித்து, நடுகற்களைத் தகர்த்து அசேராக் கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினார். மோசேயால் செய்து வைக்கப்பட்ட வெண்கலப் பாம்புச் சிலையையும் உடைத்தெறிந்தார். ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் அன்று வரை அதற்குத் தூபங்காட்டி வந்தனர். அது “நெகுஸ்தான்” என்று அழைக்கப்பட்டு வந்தது.

5அவர் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரில் முழு நம்பிக்கை வைத்திருந்தார். அவருக்குப் பின்னோ அவருக்கு முன்னோ இருந்த யூதாவின் அரசர் அனைவரிலும், அவரைப்போல் வேறு எவரும் இருந்ததில்லை.

6அவர் ஆண்டவர் மீது பற்றுக்கொண்டு அவரிடமிருந்து விலகாமல், ஆண்டவர் மோசேக்கு இட்ட கட்டளைகளைப் பின்பற்றினார்.

7ஆதலால், ஆண்டவரும் அவரோடு இருந்தார். அவர் சென்றவிடமெல்லாம் சிறப்புற்றார். மேலும், அவர் அசீரிய மன்னனுக்கு எதிராக எழுந்து அவனுக்குப் பணிய மறுத்தார்.

8அவர் பெலிஸ்தியரைக் காவல்மாடம் முதல் அரண் சூழ் நகரம் வரை, காசாவினின்றும் அதன் எல்லைக்குள்ளிருந்தும் விரட்டியடித்தார்.

9இஸ்ரயேல் அரசன் ஏலாவின் மகனான ஓசேயா ஆட்சியேற்ற ஏழாவது ஆண்டில், அதாவது அரசர் எசேக்கியாவின் நான்காம் ஆட்சி ஆண்டில், அசீரிய மன்னன் சல்மனேசர் சமாரியாவுக்கு எதிராக வந்து அதை முற்றுகையிட்டான்.

10மூன்று ஆண்டுகளின் முடிவில் அவன் அதைக் கைப்பற்றினான். அரசர் எசேக்கியா ஆட்சியேற்ற ஆறாம் ஆண்டில், அதாவது இஸ்ரயேல் அரசன் ஓசேயாவின் ஒன்பதாம் ஆட்சி ஆண்டில் சமாரியா கைப்பற்றப்பட்டது.

11அசீரிய மன்னன் இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான்; அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக்கரையிலும் மேதியர் நகர்களிலும் குடியேற்றினான்.

12ஏனெனில், அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்காமல், அவரது உடன்படிக்கையையும் ஆண்டவரின் ஊழியர் மோசே இட்ட கட்டளைகள் யாவற்றையும் மீறினார்கள். அவர்கள் செவிகொடுக்கவுமில்லை, கீழ்ப்படியவுமில்லை.

அசீரியர் எருசலேமைத் தாக்குதல்
(2 குறி 32:1-19; எசா 36:1-22)

13எசேக்கியா ஆட்சியேற்ற பதினான்காம் ஆண்டில் அசீரிய மன்னன் சனகெரிபு யூதாவிலிருந்த அரண்சூழ் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டுக் கைப்பற்றினான்.

14அப்போது, யூதா அரசர் எசேக்கியா இலாக்கிசிலிருந்து அசீரிய மன்னனிடம் தூதனுப்பி, “நான் பாவம் செய்துவிட்டேன். எனவே, என்னை விட்டுத் திரும்பிச் செல்லும். நீர் கேட்பதை நான் தந்து விடுகிறேன்” என்றார். அப்படியே அசீரிய மன்னன், யூதா அரசர் எசேக்கியாவை பன்னிரண்டாயிரம் கிலோ கிராம்* வெள்ளியும் ஆயிரத்து இருநூறு கிலோ கிராம்** பொன்னும் செலுத்துமாறு கட்டளையிட்டான்.

15எசேக்கியா ஆண்டவரது இல்லத்திலும், அரசரது அரண்மனைக் கருவூலங்களிலும் காணப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தார்.

16இச்சமயம் யூதா அரசர் எசேக்கியா, ஆண்டவரின் இல்லக் கதவுகளிலும் கதவு நிலைகளிலும், தாம் பதித்திருந்த பொன் தகடுகளைக் கழற்றி அசீரிய மன்னனுக்குக் கொடுத்தார்.

17ஆயினும், அசீரிய மன்னன் இலாக்கிசிலிருந்து தர்த்தானையும் இரப்சாரிசையும் இரப்சாக்கேயையும் பெரும் படையுடன் எருசலேமுக்கு அரசர் எசேக்கியாவுக்கு எதிராக அனுப்பினான். இவர்கள் புறப்பட்டு எருசலேமை வந்தடைந்து, வண்ணான் துறை வழியருகிலுள்ள மேல் குளத்துக் கால்வாய் அருகே நின்றனர்.

18அப்பொழுது அவர்கள் அரசரைத் தங்களிடம் அழைத்தனர். ஆனால், அரண்மனையின் மேலாளனும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிமும், எழுத்தனான செபுனாவும் அரசருடைய பதிவாளனும் ஆசாபின் மகனுமான யோவாகும் அவர்களைச் சந்திக்கச் சென்றனர்.

19அப்பொழுது, இரப்சாக்கே அவர்களைப் பார்த்து, “நீங்கள் எசேக்கியாவுக்குக் கீழ்கண்டவாறு கூறுங்கள்: பேரரசராகிய அசீரிய மன்னர் கூறுவது இதுவே:

20உனது துணிச்சலின் காரணம் என்ன? வெறும் சொற்கள் போர்த் தந்திரமும் வீரமும் ஆகிவிடுமா? யாரை நம்பி என்னை எதிர்க்கத் துணிகிறாய்?

21இதோ பார்! தன் மீது சாய்பவனின் உள்ளங்கையைக் குத்திக் கிழிக்கும் பிளவுபட்ட நாணல் குச்சியான எகிப்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்! எகிப்திய மன்னனான பார்வோனும் தன்னை நம்புகிற யாவருக்கும் அவ்விதமே செய்வான்.

22நீ ஒருவேளை, ‘எங்கள் கடவுளான ஆண்டவரின் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்’ என்று சொல்லலாம். ஆனால், யூதா மக்களையும் எருசலேம் மக்களையும் பார்த்து, ‘நீங்கள் எருசலேமிலிருக்கும் இப்பலிபீடத்தில் மட்டும் வழிபடுங்கள்’ என்று கட்டளையிட்டபொழுது எசேக்கியாவாகிய நீ அவருடைய தொழுகை மேடுகளையும் பலிபீடங்களையும் அழிக்கவில்லையா?

23இப்பொழுது என் தலைவராகிய அசீரிய மன்னன் சார்பாகச் சவால் விடுக்கிறேன். நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைத் தருவேன். அவற்றுக்குத் தேவையான குதிரை வீரர்களை உன்னால் தர முடியுமா?

24தேர்களுக்கும் குதிரை வீரர்களுக்கும் எகிப்தை நம்பியிருக்கும் உன்னால் என் தலைவரின் பணியாளருள் கடையனான ஒரு படைத் தலைவனைக் கூட எதிர்த்து நிற்க முடியுமா?

25ஆண்டவரின் திருவுளம் அறியாமலா நான் இவ்விடத்தை அழிக்க வந்துள்ளேன்? ஆண்டவர் என்னைப் பார்த்து, ‘நீ புறப்பட்டுச் சென்று அந்நாட்டை அழித்துவிடு’ என்று கூறியுள்ளார்” என்றான்.

26அப்போது இல்க்கியாவின் மகன் எலியாக்கிமும், செபுனாவும், யோவாகும் இரப்சாக்கேயை நோக்கி, “உம் பணியாளராகிய எங்களோடு சிரியா மொழியிலேயே பேசும். அது எங்களுக்குப் புரியும். மதிலின்மேல் இருக்கும் மக்கள் காதில் விழும்படியாக யூத மொழியில் எங்களோடு பேச வேண்டாம்” என்றனர்.

27அதற்கு அவன் அவர்களிடம், “என் தலைவர் என்னை அனுப்பியது உங்கள் தலைவரிடமும் உங்களிடமும் மட்டுமா? இல்லை. தங்கள் மலத்தைத் தின்று, தங்கள் சிறுநீரைக் குடித்து உங்களுடன் மடியவிருக்கும் மதிற்சுவர் ஆள்களுக்கும் இது புரியட்டும்” என்றான்.

28இதன்பின் இரப்சாக்கே எழுந்து நின்று யூத மொழியில் உரத்த குரலில் பேசலானான்: “மாவேந்தரான அசீரிய மன்னரின் வார்த்தையைக் கேளுங்கள்.

29அவர் கூறுவது இதுவே: எசேக்கியா உங்களை ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில், உங்களை என் கையிலிருந்து விடுவிக்க அவனால் முடியாது.

30அவன், ‘ஆண்டவர் நம்மை விடுவிப்பது உறுதி. இந் நகர் அசீரிய மன்னனின் கையில் ஒப்பவிக்கப்படாது’ என்று கூறி உங்களை ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்ளச் செய்வான்.

31எசேக்கியாவின் சொல்லுக்குச் செவி கொடாதீர்கள். ஏனெனில், அசீரிய மன்னர் கூறுவது இதுவே: நீங்கள் என்னோடு சமாதானம் செய்து கொண்டு வெளியே என்னிடம் வாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தம் சொந்த திராட்சைக் கொடியின் பழத்தைச் சுவைத்து, தம் சொந்த அத்திமரத்தின் பழத்தைத் தின்று, சொந்தக் கிணற்றின் தண்ணீரைக் குடிக்கலாம்.

32பின் நான் வந்து உங்கள் நாட்டைப் போன்ற ஒரு நாட்டுக்கு, தானியமும் திராட்சைக் கனியும் மிக்க நாட்டுக்கு, அப்பமும் திராட்சைத் தோட்டமும் மிகுந்த நாட்டுக்கு, ஒலிவ மரங்களும் தேனும் மிகுந்த நாட்டுக்கு, உங்களை அழைத்துச் செல்வேன். நீங்கள் சாகாமல் உயிரோடு இருக்கப் பாருங்கள். ஆண்டவர் நம்மைக் காப்பார் என்று கூறி உங்களை ஏமாற்றும் எசேக்கியாவுக்குச் செவி கொடாதீர்கள்.

33எந்த ஒரு நாட்டின் தெய்வமாவது தன் நாட்டை அசீரிய மன்னரிடமிருந்து மீட்டதுண்டா?

34ஆமாத்து, அர்ப்பாது நகர்களின் தெய்வங்கள் எங்கே? செபர்வயிம், ஏனா, இவ்வா ஆகியவற்றின் தெய்வங்கள் எங்கே? அவை சமாரியாவை என் கையினின்று விடுத்தனவா?

35அத்தனை நாடுகளின் தெய்வங்களில் ஒன்றாவது தன் நாட்டை என் கையினின்று விடுவித்ததுண்டா? அப்படியிருக்க, ஆண்டவரால் எவ்வாறு எருசலேமை என் கையினின்று விடுவிக்க முடியும்?”

36ஆனால், மக்கள் மௌனமாய் இருந்தனர். ஒரு வார்த்தைகூடப் பதில் கூறவில்லை. ஏனெனில், ‘அவனுக்கு ஒரு பதிலும் கூறவேண்டாம்’ என்று அரசர் கட்டளையிட்டிருந்தார்.

37பின்பு, அரண்மனையின் மேலாளனும் இல்க்கியாவின் மகனுமான எலியாக்கிமும், எழுத்தனான செபுனாவும், பதிவாளனும் ஆசாபின் மகனுமான யோவாகும் தம் ஆடைகளைக் கிழித்து விட்டு சாக்கு உடை உடுத்திக் கொண்டு எசேக்கியாவிடம் வந்து, இரப்சாக்கே கூறியவற்றை அவருக்குத் தெரிவித்தனர்.


18:14 * ‘முந்நூறு தாலந்து’ என்பது எபிரேய பாடம்.
18:14 ** ‘முப்பது தாலந்து’ என்பது எபிரேய பாடம்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks