back to top
HomeTamil2 அரசர்கள் அதிகாரம் - 15 - திருவிவிலியம்

2 அரசர்கள் அதிகாரம் – 15 – திருவிவிலியம்

2 அரசர்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

யூதா அரசன் அசரியா
(2 குறி 26:1-23)

1இஸ்ரயேலின் அரசன் எரொபவாம் ஆட்சியேற்ற இருபத்தேழாம் ஆண்டில், யூதா அரசனும் அமட்சியாவின் மகனுமான அசரியா அரசனானான்.

2அவன் ஆட்சியேற்ற பொழுது அவனக்கு வயது பதினாறு. அவன் எருசலேமில் ஐம்பத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். எருசலேம் நகரைச் சார்ந்த எக்கொலியா என்பவளே அவன் தாய்.

3அவன் தன் தந்தை அமட்சியா செய்ததுபோலவே, எல்லாவற்றிலும் ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்தான்.

4ஆயினும், அவன் தொழுகை மேடுகளை அழிக்கவில்லை. மக்கள் இன்னும் அம்மேடுகளில் பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர்.

5எனவே, ஆண்டவர் அவ்வரசனைத் தண்டித்து அவன் இறக்குமட்டும் அவனைத் தொழுநோயாளன் ஆக்கினார். அவனும் ஒரு ஒதுக்குப் புறமான வீட்டில் வாழ்ந்து வந்தான். எனவே, அரசனின் மகன் யோத்தாம் அரண்மனைப் பொறுப்பேற்று நாட்டு மக்களை ஆண்டு வந்தான்.

6அசரியாவின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும் ‘யூதாவின் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

7அசரியா தன் மூதாதையரோடு துயில்கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் யோத்தாம் அரசன் ஆனான்.

இஸ்ரயேல் அரசன் செக்கரியா

8யூதா அரசன் அசரியா ஆட்சி ஏற்ற முப்பத்தெட்டாம் ஆண்டில் எரொபவாமின் மகன் செக்கரியா சமாரியாவிலிருந்துகொண்டு இஸ்ரயேலை ஆறு மாதம் ஆண்டான்.

9அவனும் தன் மூதாதையர் செய்தது போல் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியை விட்டு அவன் விலகவில்லை.

10யாபேசின் மகன் சல்லூம், அவனுக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்து அவனை இப்லயாமில் வெட்டிக் கொன்றுவிட்டு அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.

11செக்கரியாவின் பிற செயல்கள் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

12“உன் மைந்தர் நான்கு தலைமுறைகளுக்கு இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருப்பர்” என்று ஏகூவுக்கு ஆண்டவர் கூறிய வாக்கு இவ்வாறு நிறைவேறிற்று.

இஸ்ரயேல் அரசன் சல்லூம்

13யூதா அரசன் அசரியா ஆட்சியேற்ற முப்பத்தொன்பதாம் ஆண்டில், யாபேசின் மகன் சல்லூம் அரசனானான்; சமாரியாவில் அவன் ஒரு மாதமே ஆட்சி செய்தான்.

14காதி என்பவனின் மகனான மெனகேம், திர்சாவிலிருந்து புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்து, சல்லூமை வெட்டிக் கொன்றுவிட்டு, அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.

15சல்லூமின் பிற செயல்களும் அவன் செய்த சதியும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

16பிறகு, மெனகேம் திப்சாவையும் திர்சா முதல் அதன் எல்லைகள் அனைத்தையும் அதில் இருந்த அனைவரையும் அழித்தான். அவர்கள் தங்கள் நகர் வாயில்களைத் திறக்கவில்லையாதலின், அவன் அவர்களை வெட்டி வீழ்த்தியதோடு, கருவுற்றிருந்த எல்லாப் பெண்களையும் வயிற்றைக் கிழித்துக் கொன்றான்.

இஸ்ரயேல் அரசன் மெனகேம்

17யூதாவின் அரசன் அசரியா ஆட்சியேற்ற முப்பத்தொன்பதாம் ஆண்டில், காதியின் மகன் மெனகேம் இஸ்ரயேலின் அரசனாகி, சமாரியாவில் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

18அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். மேலும் அவன், தன் வாழ்நாள் முழுவதும், இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியைவிட்டு விலகவில்லை.

19அசீரியா மன்னனான பூல்* நாட்டின்மீது படையெடுத்து வந்தான். அப்போது மெனகேம், பூலுக்கு, அவன் ஆற்றலினால் தன் அரசை உறுதியாக்கிக் கொள்ளும் பொருட்டு, நாற்பதாயிரம் வெள்ளி கொடுத்தான்.

20மெனகேம் இஸ்ரயேலில் இருந்த செல்வர்களிடமிருந்து இப்பணத்தை, ஆள் ஒன்றுக்கு ஐம்பது வெள்ளிக் காசுகள் வீதம், அசீரியா மன்னனுக்குக் கொடுக்கும்படியாக வசூலித்தான். அசீரியா மன்னனும் அங்கே தங்காது நாட்டை விட்டு வெளியேறினான்.

21மெனகேமின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

22மெனகேம் தன் மூதாதையரோடு துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் பெக்ககியா அரசன் ஆனான்.

இஸ்ரயேல் அரசன் பெக்ககியா

23யூதாவின் அரசன் அசரியா ஆட்சியேற்ற ஐம்பதாம் ஆண்டில், மெனகேமின் மகன் பெக்ககியா இஸ்ரயேலின் அரசனாகிச் சமாரியாவில் ஈராண்டுகள் ஆட்சி செய்தான்.

24அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியைவிட்டு அவன் விலகவில்லை.

25இரமலியாவின் மகனும் படைத் தலைவனுமான பெக்கா அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து தன்னோடு இருந்த ஐம்பது கிலயாதியரோடு சமாரியாவிலுள்ள அரண்மனைக் கோட்டைக்குள் புகுந்து அரசனையும், அர்கோபு, அரியே என்பவர்களையும் கொன்று அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.

26பெக்ககியாவின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

இஸ்ரயேல் அரசன் பெக்கா

27யூதாவின் அரசன் அசரியா ஆட்சியேற்ற ஐம்பத்திரண்டாம் ஆண்டில், இரமலியாவின் மகன் பெக்கா இஸ்ரயேலின் அரசனாகி சமாரியாவில் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

28அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவவழியை விட்டு அவன் விலகவில்லை.

29இஸ்ரயேல் அரசன் பெக்காவின் ஆட்சிக் காலத்தில், அசீரியா மன்னன் திக்லத்-பிலேசர் படையெடுத்து வந்து, ஈயோன் ஆபல்பெத்மாக்கா, யானோவாக்கு, கெதேசு, ஆட்சோர் ஆகிய நகர்களையும் கிலயாது, கலிலேயா, நப்தலி ஆகிய நிலப்பகுதிகளையும் கைப்பற்றினான்; மேலும், மக்களை அசீரியாவுக்கு நாடு கடத்தினான்.

30ஏலாவின் மகன் ஓசேயா, இரமலியாவின் மகன் பெக்காவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து, அவனை வெட்டிக் கொன்றுவிட்டு, அசரியாவின் மகன் யோத்தாம் ஆட்சியேற்ற இருபதாம் ஆண்டில், பெக்காவுக்குப் பின் அரசன் ஆனான்.

31பெக்காவின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும் ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

யூதா அரசன் யோத்தாம்
(2 குறி 27:1-9)

32இஸ்ரயேலின் அரசனும் இரமலியாவின் மகனுமான பெக்கா ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசனும் அசரியாவின் மகனுமான யோத்தாம் அரசன் ஆனான்.

33அவன் அரசனான போது, அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். சாதோக்கின் மகளான எருசா என்பவளே அவனுடைய தாய்.

34அவன் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து, அவன் தந்தை அசரியா செய்தது போலவே, அனைத்தையும் செய்தான்.

35ஆயினும், அவன் தொழுகை மேடுகளை அழிக்கவில்லை. இன்னும் மக்கள் அம்மேடுகளில் பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர். கோவிலின் உயர்வாயிலைக் கட்டியவன் இவனே.

36யோத்தாமின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா?

37அந்நாள்களில் ஆண்டவர் சிரியாவின் மன்னன் ரெட்சீனையும் இரமலியாவின் மகன் பெக்காவையும் யூதாவுக்கு எதிராய் அனுப்பத் தொடங்கினார்.

38யோத்தாம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு, தன் தந்தையாகிய தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் ஆகாசு அரசனானான்.


15:7 எசா 6:1.
15:12 2 அர 10:30.


15:19 ‘திக்லத்பிலேசர்’ என்பது மறுபெயர்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks