back to top
HomeTamil1 சாமுவேல் அதிகாரம் - 6 - திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரம் – 6 – திருவிவிலியம்

1 சாமுவேல் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

உடன்படிக்கைப் பேழையைத் திருப்பி அனுப்புதல்

1ஆண்டவரின் பேழை பெலிஸ்தியரின் நாட்டில் ஏழு மாதம் இருந்தது.

2பெலிஸ்தியர் அர்ச்சகர்களையும் குறி சொல்கிறவர்களையும் அழைத்து, “ஆண்டவரின் பேழையை நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதை எவ்வாறு அதன் இடத்திற்கு நாங்கள் அனுப்ப வேண்டுமென்று தெரிவியுங்கள்” எனக் கேட்டனர்.

3அவர்கள் கூறியது: “நீங்கள் இஸ்ரயேலரின் கடவுளது பேழையை அனுப்பினால் அதை வெறுமையாக அனுப்பலாகாது; குற்றநீக்கப்பலி கட்டாயமாக அவருக்குச் செலுத்தவேண்டும். அப்போது நீங்கள் குணமாக்கப்படுவீர்கள். அவரது கை உங்களைவிட்டு விலகாதிருந்ததன் காரணத்தையும் அறிந்து கொள்வீர்கள்.”

4அதற்கு அவர்கள், “நாங்கள் அவருக்குச் செலுத்த வேண்டிய குற்ற நீக்க பலி யாது?” என்று கேட்க, அவர்கள் கூறியது: “பெலிஸ்தியத் தலைவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஐந்து பொன் மூலக் கட்டிகளின் உருவங்களும் ஐந்து பொன் சுண்டெலிகளும் மட்டுமே. ஏனெனில், உங்கள் அனைவர் மீதும் உங்கள் தலைவர்கள் மீதும் ஒரே வாதைதான் ஏற்பட்டது.

5ஆகவே, உங்கள் மூலக் கட்டிகளின் உருவங்களையும் நிலத்தைப் பாழ்படுத்தும் சுண்டெலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ரயேலரின் கடவுளைப் புகழுங்கள். அப்போது ஒருவேளை உங்களிடமிருந்தும் உங்கள் தெய்வங்களிடமிருந்தும் உங்கள் நாட்டினின்றும் அவரது கை விலகும்.

6எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இதயங்களைக் கடினப்படுத்தியது போல நீங்கள் ஏன் உங்கள் இதயங்களைக் கடினப்படுத்த வேண்டும்? அவர் அவர்களைத் துன்புறுத்த அவர்களும் இஸ்ரயேலரைச் செல்லுமாறு விட்டுவிட்டனரே!

7இப்போது நீங்கள் ஒரு புதிய வண்டியைச் செய்யுங்கள். இதுவரை நுகம் பூட்டாத இரு கறவைப் பசுக்களைப் பிடித்து அவற்றை வண்டியில் பூட்டுங்கள். அவற்றின் கன்றுக்குட்டிகளை விலக்கி வீட்டுக்கு இட்டுச் செல்லுங்கள்.

8ஆண்டவரின் பேழையை எடுத்து அதை வண்டியின் மீது வைத்து குற்ற நீக்க பலியாக நீங்கள் செலுத்தும் பொன் உருவங்களை அருகே ஒரு பெட்டியில் வையுங்கள். பிறகு வண்டியை அனுப்பிவிடுங்கள்; அது தானே செல்லட்டும்.

9பின் கவனியுங்கள்; அது தன் நாட்டு எல்லைக்குச் செல்லும் வழியாக பெத்சமேசுக்குச் சென்றால், இப்பெரிய தீங்கை நமக்கு இழைத்தவர் அவரே என்று அறியலாம். இல்லையேல், அவரது கை நம்மைத் தொடவில்லை. மாறாக, அது நமக்குச் தற்செயலாக நடந்தது என்று நாம் அறியலாம்.”

10அவர்களும் அவ்வாறே செய்தனர். இரு கறவைப் பசுக்களைக் கொண்டு வந்து பூட்டினர். அவற்றின் கன்றுகளைத் தொழுவத்தில் அடைத்து வைத்தனர்.

11ஆண்டவரின் பேழையையும் பொன் சுண்டெலிகளும், மூலக்கட்டிகளின் உருவங்களும் வைத்திருந்த பெட்டியையும் அவ்வண்டியில் வைத்தனர்.

12பசுக்கள் பெத்சமேசுக்குச் செல்லும் பெருஞ்சாலையில் இடமோ வலமோ விலகாமல் நேரே கத்திக் கொண்டே சென்றன. பெலிஸ்தியத் தலைவர்கள் அவற்றின் பின் பெத்சமேசு எல்லை வரை சென்றனர்.

13அப்போது பெத்சமேசு வாழ் மக்கள் பள்ளத்தாக்கில் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் கண்களை உயர்த்திய போது பேழையைக் கண்டு மகிழ்ச்சியுற்றனர்.

14பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலுக்குள் வண்டி வந்து நின்றது. அங்கே ஒரு பாறை இருந்தது. அவர்கள் வண்டியின் மரத்தை பிளந்து பசுக்களை ஆண்டவருக்கு எரி பலி செலுத்தினர்.

15லேவியர் ஆண்டவரின் பேழையையும் அதன் அருகில் இருந்த பொன் உருவங்களைக் கொண்டிருந்த பெட்டியையும் இறக்கி, பாறையின் மீது வைத்தனர். பெத்சமேசின் மக்கள் அன்றையதினம் எரி பலிகளையும் வேறு பலிகளையும் ஆண்டவருக்குச் செலுத்தினர்.

16பெலிஸ்தியரின் ஐந்து தலைவர்களும் இதைக் கண்டபின் அன்றே எக்ரோனுக்குத் திரும்பினர்.

17பெலிஸ்தியர் குற்ற நீக்க பலியாக ஆண்டவருக்குச் செலுத்திய மூலக் கட்டிகளின் பொன் உருவங்கள் இவையே; அஸ்தோதுக்கு ஒன்று, காசாவுக்கு ஒன்று, அஸ்கலோனுக்கு ஒன்று, மாத்திற்கு ஒன்று, எக்ரோனுக்கு ஒன்று.

18பொன் சுண்டெலிகள், அரண் சூழ் நகர்கள் தொடங்கி, நாட்டுப்புறச் சிற்றூர்கள் வரை ஐந்து தலைவர்களுக்குச் சொந்தமான அனைத்து பெலிஸ்திய நகர்களின் எண்ணிக்கைக்குச் சரியாக இருந்தன. ஆண்டவரின் பேழையை வைக்கப்பட்ட அந்தப் பாறை இந்நாள் வரை பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலில் உள்ளது.

19பெத்சமேசு வாழ் மக்களை ஆண்டவர் சாகடித்தார். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் பேழைக்குள் உற்று நோக்கினர். மக்களுள் எழுபது பேரை* அவர்வீழ்த்தினர். மக்களிடையே இப்பெரும் அழிவை ஏற்படுத்தியதற்காக மக்கள் புலம்பினார்கள்.

கிரியத்து எயாரிமில் உடன்படிக்கைப் பேழை

20பெத்சமேசு வாழ் மக்கள், “இந்தத் தூய கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நிற்கத் தகுந்தவன் யார்? நம்மிடமிருந்து அவர் யாரிடம் செல்லப் போகிறார்?” என்றுக் கேட்டுக் கொண்டனர்.

21ஆகவே, கிரியத்து எயாரிம் வாழ் மக்களுக்கு ஆள்களை அனுப்பி, “ஆண்டவரின் பேழையைப் பெலிஸ்தியர் திருப்பி அனுப்பிவிட்டார்கள். நீங்கள் வந்து அதை உங்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள்.


6:19 ‘மக்களுள் எழுபது பேரையும் ஐம்பதினாயிரம் பேரையும்’ என்பது எபிரேய பாடம்.
Pradeep Augustine
Pradeep Augustinehttps://bible.catholicgallery.org/
Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Access Catholic Videos
Subscribe to our YouTube channel to access Mass Readings and Prayers as videos.
No Thanks